ரயிலில் சுத்தம் செய்த குப்பையை தண்டவாளத்தில் தள்ளிய நபர் ரயிலில் சேரும் குப்பையை சேகரித்து அகற்ற புதிய விதிமுறை
* வெளிநாட்டு பயணி எடுத்த வீடியோவால் சர்ச்சைக்குள்ளான இந்திய ரயில்வே நிர்வாகம்
சென்னை: ரயில் பயணத்தின் போது சேரும் குப்பை கழிவுகளை சரியாக சேகரித்து அகற்றுவதற்கு ரயில்வே வாரியம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரயிலில் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. அந்த வீடியோவில், ஒரு ரயில்வே ஊழியர் பெட்டியை சுத்தம் செய்துவிட்டு, அந்த குப்பையை நேரடியாக தண்டவாளத்தில் கொட்டிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து இந்திய ரயில்வேயின் சுத்தம் மற்றும் குடிமை உணர்வு பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை படம் பிடித்துள்ளனர். நான் வீடியோ எடுப்பதை பார்த்தும் கூட அவர் கவலைப்படவில்லை என்று படம் எடுத்தவர் சொல்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘பேக்பேக்கர் பென் ‘ என்ற பயனர் “இந்தியாவில் ரயில்களை எப்படி சுத்தம் செய்கிறார்கள்” என்ற தலைப்புடன் போட்டுள்ளார். இந்த வீடியோவை 2.6 லட்சத்திற்கும் மேல் பார்த்துள்ளனர். 6,400க்கும் மேல் லைக்குகள் வந்துள்ளன.
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த ரயில்வே நிர்வாகம் ரயில் பயணத்தின்போது சேரும் குப்பை கழிவுகளை சரியாக சேகரித்து அகற்றுவதற்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் பணிபுரியும் சுத்தம் செய்யும் ஊழியர்கள் மற்றும் உணவு வண்டி பணியாளர்கள் பயணிகள் பெட்டிகளில் இருந்து குப்பை கழிவுகளை சேகரிக்க வேண்டும். அதை மூடிய பைகளில் போட்டு, குறிப்பிட்ட நிலையங்களில் கொட்ட வேண்டும். இதனால் பெட்டிகள், கழிவறைகள், ரயில்நிலையங்கள் எல்லாம் சுத்தமாக இருக்கும்.
ரயிலில் வேலை செய்பவர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. அவர்கள் பயணிகளுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து ரயில்களிலும் ஒரு மாதம் ‘சம்வாத்’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், மூத்த அதிகாரிகள் வந்து குப்பை மேலாண்மை பற்றி விளக்குவார்கள். பணியாளர்களின் சந்தேகங்களை தீர்ப்பார்கள் சரியான முறையை காட்டும் வீடியோக்கள் போடுவார்கள்.
ஒவ்வொரு ரயில்வே பிரிவும் இதை பற்றிய அறிக்கையை மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பயிற்சி முடிந்து 10 நாளில் முழு விவரமும் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்படும். இந்த விதிகளை ஒப்பந்ததாரர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். யாராவது இதை மீறினால், அது பெரிய தவறாக கருதப்படும். ஒப்பந்தமே ரத்து செய்யப்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே இந்த திட்டத்தின் மூலம், ரயில்களில் சுகாதாரத்தை மேம்படுத்த விரும்புகிறது. பயணிகளுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஒன்றிய அரசின் சுவச்ச பாரத் இயக்கத்தை ஆதரிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.