திருவள்ளூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில்கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கான கல்லறை தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கீடு
சென்னை: திருவள்ளூர், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான கல்லறை தோட்டம் அமைத்திட நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை முதல்வர் வழங்கினார். கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி, நகராட்சி சார்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 9.1.2024 அன்று தலைமை செயலகத்தில், நடந்த சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் - கோட்டைபட்டி, தேனி மாவட்டம் - அல்லிநகரம், ராமநாதபுரம் மாவட்டம் - சக்கரக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் - திருப்பாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்-எளம்பலூர், சிவகங்கை மாவட்டம் - அரசணி ஆகிய இடங்களில் கிறித்தவர்களுக்கான அரசு பொது கல்லறைத் தோட்டங்கள் அமைக்கவும், விருதுநகர் மாவட்டம் - கோட்டைபட்டி, தேனி மாவட்டம் - அல்லிநகரம், திருவள்ளூர் மாவட்டம் - திருப்பாச்சூர்,
பெரம்பலூர் மாவட்டம் - எளம்பலூர், சிவகங்கை மாவட்டம் - அரசணி ஆகிய இடங்களில் இஸ்லாமியர்களுக்கான அரசு பொது கபர்ஸ்தான்கள் அமைக்கவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர், பெயர் பலகை மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து முறையாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கிடும் விதமாக அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் சுபேர்கான், தலைமை செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.