Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூர் புதுப்பெண் தற்கொலை விவகாரம் வழக்கை சிபிஐக்கு மாற்ற பெற்றோர் வலியுறுத்தல்: எடப்பாடியுடன் சந்திப்பு

சேலம்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 4ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 100 பவுன் நகை, ரூ.62 லட்சம் கார் வழங்கப்பட்டது. மேலும் 200 பவுன் நகை வேண்டும் என கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் கேட்டு ரிதன்யாவுக்கு டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 21ம்தேதி, ரிதன்யாவை அவரது பெற்றோர் வீட்டில் கவின்குமார் விட்டுவிட்டு சென்றார். 28ம்தேதி, பெருமாள் கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு காரில் ரிதன்யா சென்றார். ஆனால் காரில் இருந்தவாறே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரிதன்யா வாட்ஸ் அப்பில் தந்தைக்கு வீடியோ அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கதறி அழுதபடி கணவர், மாமியார், மாமனார் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகவும், இதை சொன்னால் நீங்கள் அட்ஜஸ்ட் பண்ணி வாழும்படி கூறுகிறீர்கள். என்னால் கொடுமையை தாங்க முடியவில்லை. மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான். என் சாவிற்கு கணவன் மற்றும் மாமனார், மாமியார்தான் காரணம்’ என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் உறவினர்கள், நேற்று சேலம் வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

பின்னர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது மகள் தற்கொலை வழக்கில் ஆரம்பத்தில் விசாரணை நன்றாக இருந்தது. அதன்பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஈஸ்வர மூர்த்தியின் தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இதனால் தடயத்தை அழிக்கவும், என் மகள் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிகள் செய்துவருகின்றனர். இதனால் எனது மகளுக்கு நீதி கிடைக்காது.

எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். 3 பேரை கைது செய்ததாக கூறினர். ஆனால் 2 பேரை மட்டுமே கைது செய்தனர். சித்ராதேவியை கைது செய்யவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறுகின்றனர். ஒரே நாளில் எப்படி சரியில்லாமல் போகும்? எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதற்கு நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுப்போம்,’ என்றார்.