திருப்பதி புனிதமான ஆன்மீக தலம்; சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது: எக்ஸ் தளத்தில் பவன்கல்யாண் பதிவு
திருமலை: சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது என்று ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உலகளாவிய இந்து சமூகத்திற்கு, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு புனித யாத்திரை மையமாகும். இது ஒரு புனிதமான ஆன்மீக தலம். திருப்பதி லட்டு வெறும் இனிப்பு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிபூர்வமானது. அதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பக்தியுடன் வழங்குகிறோம். ஏனெனில் அது அனைவரது கூட்டு நம்பிக்கையையும் ஆழ்ந்த பக்தியையும் உள்ளடக்கியது.
சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். சனாதனர்களின் உணர்வுகள் மற்றும் நடைமுறைகள் கேலி செய்யப்படும்போது அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும்போது, அது வெறும் புண்படுத்தும் விஷயமல்ல. அது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், பக்தியையும் சிதைக்கிறது. மதச்சார்பின்மை இருவழிப்பாதையாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதையை பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க முடியாது.
நமது சனாதன தர்மம் பழமையான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் நாகரீகங்களில் ஒன்றாகும். மேலும் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை நிறுவ வேண்டிய நேரம் இது. ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
