Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை மோசடி வழக்கில் பரபரப்பு; கோர்ட்டில் ஆஜராக இருந்த விஜிலென்ஸ் அதிகாரி கொலை?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய எழுத்தர் சி.வி. ரவிக்குமார் கடந்த 2023ல் கையும் களவுமாக விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் சிக்கினார். விசாரணையில் அவர் பல ஆண்டுகளாக உண்டியல் பணத்தை திருடி வந்தது தெரிந்தது. சுமார் 100 கோடி ரூபாய் வரை திருடியது தெரிந்தது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ரவிக்குமார் தான் செய்த தவறை உணர்ந்து ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தேவஸ்தானத்திற்கு திருப்பி எழுதி கொடுப்பதாக கூறினார். இதனை லோக் அதாலத் மூலம் வழக்கு முடிவுக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் அனைத்தும் அப்போதைய ஜெகன்மோகன் ஆட்சியில் சில அழுத்தம் காரணமாக ரவிக்குமார் விடுவிக்கப்பட்டு வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்த நிலையில் ரவிக்குமாரிடம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்ததாகவும், ஆனால் அவர் தேவஸ்தானத்திற்கு வெறும் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே எழுதிகொடுத்தாகவும், மீதமுள்ள சொத்துக்களை அப்போதைய ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கு பிரித்துக்கொண்டதாக குற்றம்சாட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றம் விசாரித்து லோக் அதாலத் தீர்ப்பை ரத்துசெய்து கூடுதல் டி.ஜி.பி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் உதவி பாதுகாப்பு அதிகாரி சதீஸ்குமார் கடந்த 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த வழக்கில் மீண்டும் அவரை நேற்று விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரி- குத்தி மார்க்கத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே நேற்று சதீஷ்குமார் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த எ போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து ரயில் தண்டவாளத்தின் அருகே வீசினார்களா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்டது. ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்த சதிஷ்குமாரை யாரேனும் கொலை செய்து தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று சதிஷ்குமார் எஸ்ஐடி விசாரணையின் முன் ஆஜராகி மேலும் பல உண்மைகளை தெரியப்படுத்த இருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.