திருநெல்வேலி எம்பி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு நயினார் நாகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 26ல் குறுக்கு விசாரணை
சென்னை: கடந்த 2024 மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகியிருந்த நயினார் நாகேந்திரன் சாட்சி கூண்டில் ஏறி, சத்திய பிரமாணம் செய்து வாக்கு மூலம் அளித்தார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, ராபர்ட் புரூசுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக நயினார் நாகேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ராபர்ட் புரூஸ் தரப்பில், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ராபர்ட் புரூஸ் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. சுமார் 19 நிமிடங்கள் ஆவணங்கள் பதிவு தொடர்பாக வாக்குமூலம் அளித்த நயினார் நாகேந்திரனிடம், ராபர்ட் புரூஸ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்வதற்காக வழக்கு விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார். அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

