Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தூத்துக்குடி - தீயில் கருகி சாம்பலான ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி.!!

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் எரிந்து சாம்பலாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் NTPL அனல் மின் நிலையத்திற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலக்கரிகள் எரிந்து சாம்பலாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள NTPL அனல் மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் உற்பத்தி யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சேமிப்புக் கிடங்கில், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு திடீரென்று இந்த நிலக்கரி குவியலில் தீப்பிடித்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனல் மின் நிலைய அதிகாரிகளும் பணியாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு மற்ற இடங்களுக்குத் தீ பரவாமல் தடுத்ததால், மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து நாசமாகி இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். விபத்து நடந்த பகுதியில் ஏதேனும் பாதுகாப்பு அத்துமீறல்கள் அல்லது மனிதத் தவறுகள் நடந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.