தோகைமலை வேளாண் பகுதிகளில் மிளகாய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம்
*அதிக மகசூல் பெற தீவிரம்
தோகைமலை : தோகைமலை வேளாண் பகுதிகளில் மிளகாய் சாகுபடி பணிகள் மும்முரமடைந்து வரும் நிலையில் மகசூல் பெற விவசாயிகள் தீவிரம்.கரூர் மாவட்டம் தோகைமலை வட்டார பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக அளவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து வேளாண் அலுவலர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். மிளகாய் சாகுபடி செய்யும் போது மானாவாhp மற்றும் இறவையில் பயிரிடுவதற்கு கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1 ஆகிய ரகங்கள் ஏற்றவையாக ஆகும். இதில் கோ 1 என்ற ரகமானது சாத்தூர் சம்பா ரகத்தின் மறுதேர்வு ஆகும். இந்த வகை மிளகாய் பழங்கள் நீளமாக வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இந்த ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 210 நாட்களில் 2.1 டன் காய்ந்த மிளகாய் மகசூல் கிடைக்கும்.
இதேபோல் கோ 2 என்பது நம்பியூர் நாட்டு ரகம் தொரிவு உருண்டை வகையை சேர்ந்தது. இந்த ரக மிளகாய் பழங்கள் அடர் சிவப்பு நிறமாகவும், அதிகமான அளவு விதையுடன் காரத்தன்மை கொண்டதாக இருக்கும்.
இந்த ரகம் சாகுபடி செய்யும் போது பச்சை மற்றும் சிவப்பு நிறம் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும் போது 210 நாட்களில் காய்ந்த மிளகாய் 2.2 டன் அளவில் கிடைக்கும். கோ 3 என்ற ரகமானது திறந்த மகரந்த சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது ஆகும்.
இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 165 நாட்களில் 3 முதல் 3.5 டன் காய்ந்த மிளகாயும், 15 முதல் 18 டன் அளவில் பச்சை மிளகாயும் மகசூல் கிடைக்கிறது.நிலம் தயாரிப்பு, பருவ மாதங்கள் மற்றும் விதை அளவு: மிளகாய் சாகுபடி செய்வதற்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலங்களை அமைக்க வேண்டும். வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்றாக வளரும். மிளகாய் சாகுபடியை ஜனவரி, பிப்ரவரி, ஜீன், ஜீலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியை தொடங்குவதற்கு ஏற்ற பருவம் ஆகும். ஒரு எக்டேருக்கு ஒரு கிலோ (நாற்றாங்காலுக்கு) நேரடி விதைப்பிற்கு 2 கிலோ விதை தேவைப்படுகிறது.
உரப்பாசனம்: கலப்பு ரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் ஒரு எக்டேருக்கு 120:80:80 கிகி அளவில் இடவேண்டும். இதில் 75 சதவீதம் மணிச்சத்தை (60 கி.கி மணிச்சத்து 375 கி.கி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடி உரமாக அளிக்க வேண்டும்.
மீதம் உள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 120:20:80 கி.கி உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவை பிரித்து பயிரின் ஆயட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.
நோய்கள்: காய்த் துளைப்பான், இலைப்பேன், அசுவினி, மஞ்சல் சிலந்தி, நாற்றழுகல், இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய், நுனிக்கருவில் மற்றும் பழ அழுகல் நோய், தேமல் நோய் என்று பல்வேறு நோய்கள் மிளகாய் சாகுபடியில் தாக்குகிறது. இந்த நோய்கள் தென்பட்டால் அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் ஆலோசனைகள் பெற்று மருந்துகள் பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: பச்சை மிளகாய் அறுவடை செய்வதற்கு நடவு செய்து 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களில் அறுவடை செய்யலாம். பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஆகவே மேற்படி தெரிவிக்கப்பட்ட வழி முறைகளில் மிளகாய் சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெலாம் என்று தெரிவித்து உள்ளனர்.