திருத்தணி: திருத்தணியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று காலை ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு பச்சைக்கல் முத்து, மரகதமாலை, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.பக்தர்கள் பலர் மொட்டையடித்து சரவண பொய்கை திருக்குளத்தில் நீராடி படிகள் வழியாக பம்பை உடுக்கை முழங்க காவடிகளுடன் முருகன் பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பொதுவழியில் அனு மதிக்கப்பட்டனர்.
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி உற்சவர் முருகப்பெருமான் காவடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார். பக்தர்கள் பக்திபரவசத்துடன் காவடி மண்டபத்தில் காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் திருத்தணி விழா கோலம் பூண்டுள்ளது.


