Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புவனம் அருகே டூவீலர்-போலீஸ் வாகனம் மோதல் குழந்தையுடன் பெற்றோர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே போலீசார் வந்த வாகனமும் டூவீலரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தையுடன் பெற்றோர் பலியாகினர். இதை கண்டித்து உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (35). இவர் மனைவி சத்யா (25), மகன் அஷ்வின்(5) ஆகியோருடன் நேற்று சக்குடி அருகே அனஞ்சியூரில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு டூவீலரில் சென்றார். பின்னர் இரவு 7.30 மணியளவில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அதே வாகனத்தில் சிட்டம்பட்டியை சேர்ந்த சோனைஈஸ்வரி (30) என்பவரும் உடன் வந்தார்.

சிவகங்கை மாவட்டம், அதிகரை அருகே சென்றபோது, எதிரே, சிவகங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனமும் டூவீலரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரசாத், அவரது மனைவி சத்யா, மகன் அஷ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சோனை ஈஸ்வரி காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக போலீஸ் வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டு சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டன. போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.