வேலூர்: காட்பாடி அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலின் என்ஜின் கழன்று சென்றது. முகுந்தராயபுரம்-திருவலம் இடையே என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையேயான கப்லிங் கழன்றது. இந்த சம்பவம் நடந்தபோது டமார் என்ற சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். சிறிது தூரம் ஓடிய என்ஜினை டிரைவர் நிறுத்தினார்.
ரயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது. என்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்கும் கப்லிங் கழன்றதால், ஒருமணி நேரமாக ரயில் பெட்டிகள் தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பயணிகளுடன் ரயில் பெட்டி தனியே நிற்கும் நிலையில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனஏ. பிரிந்து சென்ற என்ஜினை மீண்டும் பின்னோக்கி கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


