நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல்: பாஜக புதிய தலைவராக நிதின் நபின் தேர்வு..? வாக்காளர் பட்டியலில் அத்வானி, ஜோஷி பெயர் நீக்கம்
புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசியத் தலைவராகப் பதவி வகித்து வரும் ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி கே.லட்சுமண் நேற்று வெளியிட்டார். அதன்படி வரும் 19ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.
தற்போதைய செயல் தலைவரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் (46) புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் முழு ஆதரவு இவருக்கு இருப்பதால், இவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 20ம் தேதி புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
இத்தேர்தலில் பாஜகவின் நிறுவனத் தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்கட்சித் தேர்தல் இன்னும் முழுமையாக முடியாததால், கட்சியின் விதிகளின்படி அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜக வரலாற்றில் 1980ம் ஆண்டுக்குப் பிறகு மூத்த தலைவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போவது இதுவே முதல் முறை ஆகும். புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பது, அடுத்த ஒரு வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ெதாடங்குவதால் டெல்லியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



