Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம்!

டி. ஸ்ரீ தேவி லோகநாதன்

தம்மைப் போலவே பல துறைகளிலும் ஆர்வமுள்ள மாணவ மாணவியரை உருவாக்க வேண்டும். வெறும் கல்வி மட்டுமேயின்றி அவர்கள் பல துறைகளிலும் கற்றுத் தேர்ந்து நிபுணத்துவம் பெற்று வாழ்வினை வளமாக்கி கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு கற்றலையும் கற்பித்தலையும் தனது வாழ்வின் ஆதாரமாக வைத்துள்ளார் ஸ்ரீ தேவி லோகநாதன். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பன்மொழிகளை சரளமாக பேசுவதோடு, கதை, கட்டுரை, கவிதை எழுதுமளவிற்கு திறமையும் பெற்றிருக்கிறார். தனது இருபத்தி ஏழு வருட ஆசிரியர் பணியின் பயணத்தை குறித்தும், பெண் தொழில்முனைவோருக்கான பல்வேறு அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

பல்துறை ஆர்வம் குறித்து...

சிறுவயதிலிருந்தே எனக்கு நிறைய கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. எதை கற்றாலும் முழுமையாகவும் சிறப்பாகவும் கற்றுகொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பேன். அதனால் கல்வியியலில் பிஎச்டி முடித்தேன். வணிகம் மற்றும் யோகாக் கல்வியில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். பரதநாட்டியத்தில் பல வருட அனுபவங்களும் இருக்கிறது. நான் நடனம் கற்றுக் கொண்டதே தனிக்கதை. எனது பள்ளி நடன ஆசிரியர்கள் தான் எனது நடனத்தின் மீது நான்கொண்ட தீராத ஆர்வத்தினை புரிந்து கொண்டு நடனம் கற்க உதவினார்கள். அதே போன்று திருமணத்திற்கு முன்பு இளநிலை கல்வி மட்டுமே முடித்திருந்தேன். எனது கணவரது ஒத்துழைப்பால் தான் படிப்பை தொடர்ந்து பிஎச்டி வரை கற்க முடிந்தது. ஆழியார் சென்று வேதாத்ரி மகரிஷி யோகக்கலை, தியானமும் முறைப்படி கற்றுக் கொண்டேன். வாசித்தலின் மீது நான் கொண்ட ஆர்வத்தால் சென்னை பல்கலைக் கழகத்தில் லைப்ரரி கோர்ஸும் முடித்திருக்கிறேன்.

இவர் தையல் மற்றும் எம்பிராய்டரி கலையிலும் தனது தாய் திருமதி. அம்பிகா அவர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்து தன் ஆடைகளை தானே தைக்கும் அளவிற்கும், மற்ற மாணவர்களுக்கு கற்று கொடுத்தும் வந்துள்ளார். சொந்தமாக சூப்பர் மார்கெட் வைத்து சில வருடங்கள் சிறப்பாக நடத்தி, சில தவிர்க்க இயலாத காரணத்தால் அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை என வருத்தம் தெரிவித்தார். ஆனால் அதில் கிடைத்த தொழில்முனைவோருக்கான அனுபவங்கள் ஏராளம் என குறிப்பிடுகிறார்.

கல்வித்துறையை தேர்வு செய்தது குறித்து...

கற்றலை போன்றே கற்பித்தலிலும் அதீத ஆர்வம் இருந்தது. சிறு வயது முதல் ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதில் கிடைத்த மனதிருப்தி எதிலும் கிடைக்கவில்லை. எனது இருபத்து ஏழு வருட ஆசிரிய பணியின் அனுபவத்தை கொண்டு சொந்தமாக ஸ்ரீ ஜித் அகாடமி துவக்கி கற்பித்தலை பரவலாக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. நான் படிக்கும் காலத்திலேயே தனி வகுப்புகள் எடுத்து வந்தேன். அகாடமி ஆரம்பித்த பிறகு அதில் பாடகல்வியோடு பரதம், ஆங்கிலப் பயிற்சி, இந்தி பயிற்சி வகுப்புகள், கையெழுத்து பயிற்சி, வேதிக் கணிதம், அபாகஸ் மற்றும் போனிக்ஸ் வகுப்புகள் எடுத்து வருகிறேன். மற்ற ஆசிரியர்கள் உதவியுடன் மேற்கத்திய நடனம், யோகா மற்றும் தியான வகுப்புகள், செஸ், கேரம், கராத்தே, கர்நாடக சங்கீதம், கிதார், கீபோர்ட் ஓவியம் என பல கலைகளையும் ஒரே இடத்தில் சிறந்த மேலாண்மையின் கீழ் சிறப்பாக கற்று தருகிறோம். மாணவர்களின் தனிதிறமையையும் ஆர்வத்தையும் புரிந்து கொண்டு வழிநடத்துகிறோம்.

சாதனைகள் குறித்து..

எங்களது அகாடமியின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தவறியவர்கள் கூட, எங்களிடம் வந்தபின் 95 சதவீதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்கள். பாடங்களை தெளிவாக புரிந்தும், பயனறிந்தும் படிக்க கற்றுத் தருகின்றேன். எங்கள் மாணவர்கள் பல்துறைகளிலும் சாதித்து வருகிறார்கள் என்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. ஸ்ரீ ஜித் அகாடமியின் மூலமாக பல்வேறு உலகசாதனை நிகழ்வுகளில் பங்கேற்று சான்றிதழ் பெரும் வாய்ப்பினை தொடர்ந்து எம் மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன். நடனத்தில் மூன்று கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி உள்ளோம். ஏசியன் சாதனையிலும் இடம்பெற்றுள்ளோம். தொடர்ந்து நடனமாடுவது, ஒரு வருடம் தொடர்ச்சியாக நடனமாடுவது என பல்வேறு நடனநிகழ்வுகளில் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளோம். எங்கள் செஸ் விளையாட்டு மாணவர்கள் தமிழ்நாடு மாவட்டம் (District) மற்றும் மாநில (State) அளவு போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற விருதுகளை தொடர்ந்து பெற்று சாதனை படைத்து வருகிறார்கள். தற்போது பரதத்தில் எம் நடன மாணவிகள் ராதாகிருஷ்ணன் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்க தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களின் ஆர்வத்திற்க்கு உதவும் அத்தனை பெற்றோருக்கும் இச்சந்தர்பத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழியார்வம் குறித்து...

எனது தாய்மொழி மற்றும் இரண்டாம் கல்விமொழி மலையாளமாக இருந்தாலும் தமிழின்மீது கொண்ட பற்று காரணமாக எனது தந்தை தங்கப்பன் அவர்களின் உதவியுடன் தமிழ் எழுத படிக்க கற்றுக் கொண்டேன். சிறு வயது முதல் விடுமுறை நாட்களில் நூலகம் சென்று புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். பாரதியார் கவிதைகள், திருக்குறள், கண்ணதாசன் கவிதைகள், ஓஷோ, காந்தி, அப்துல்கலாம், விவேகானந்தர், எழுத்தாளர்கள் சிவசங்கரி, சுகிசிவம் என இவர்களின் புத்தகங்கள் என்னை கவர்ந்தவை. பின் சிவபுராணம், அபிராமி அந்தாதி ஆகியவற்றையும் படித்துள்ளேன். பகவத்கீதை, பைபிள், குரான் என மூன்றையும் படித்துள்ளேன். இப்போது திருவாசகத்தின் சிறப்பினை மாணவர்களுக்கு கற்றுத் தர ஆர்வமுடன் படித்தும் ஆராய்ந்தும் வருகிறேன். ஆங்கில எழுத்தாளர்கள் நார்மன் வின்சென்ட் பீல், ஷேக்ஸ்பியர், புத்தகங்கள் விரும்பி படிப்பேன். தமிழ் ஆங்கிலம் மலையாளத்தில் கவிதை எழுதுவது எனது பிடித்தமான பொழுதுபோக்கு. படிக்கும் காலத்திலேயே கல்லூரி இதழ்களில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். எனது அகாடமியின் இந்தி மற்றும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்கான பாடத்திட்ட புத்தகத்தினை மாணவர்களுக்கு மிக எளிமையாக புரியும் வண்ணம் நானே உருவாக்கி கற்பித்துவருகிறேன். கூடிய விரைவில் அதை புத்தகமாக வெளியிடும் பணிதொடங்க உள்ளேன். உலகின் ஆகச் சிறந்த நூல்களில் ஒன்றான திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டு மென்ற எண்ணத்தில் தற்போது இலவச திருக்குறள் வகுப்புகள் இசை வடிவிலும் எடுத்து வருகிறேன். வரலாறுப் பாடத்திலும் அதிக ஆர்வமுள்ளதால், நமது வரலாற்று பெருமை அறியாத நமது நாட்டில் இளைய தலைமுறையினர் கலாச்சாரம் சீர்கேட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை மாற்றும் நோக்கத்துடனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரலாற்று சிறப்பாளர்களை எமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஊக்க உரையும் வழங்கி வருகிறேன்.

சமூக சேவை ஆர்வம் குறித்து...

நிறைய ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். ஏழைப் பள்ளி குழந்தைகளுக்கு இலவச தனி பயிற்சி வகுப்புகள், நடனம் மற்றும் இலவச திருக்குறள் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஏழை எளிய மக்களுக்கு, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நிறைய இலவச பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்கிற திட்டங்கள் இருக்கிறது. தற்போது அவற்றை ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் அவற்றை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்கிற திட்டங்கள் இருக்கிறது. கல்வி மற்றும் கலையில் ஆர்வமிருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் உதவத் தயாராகவுள்ளேன்.

எதிர்காலத் திட்டங்கள்...

எனது அகாடமியின் பணிகளை இன்னும் மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் முயன்று வருகிறேன். தற்போது பதினேழு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது எதிர்காலத்தில் அதனை அதிகரித்து எல்லா பயிற்சியையும் ஒரே குடையின் கீழ் வருமாறு திட்டமிடல் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. மேலும் நிறைய சமூக சேவைகளை செய்யும் ஆர்வங்கள் நிறைய இருக்கிறது.

எனது தொழில் மற்றும் சேவைகளுக்கு எனது கணவரும், மகனும், பெற்றோரும், சகோதரியும், தோழிகளும், எமது அகாடமி ஆசிரியர்களும், மற்றும் அன்பார்ந்த எனது மாணவகுழந்தைகளும் ஏராளமாக ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். அவர்களால் தான் என்னால் நிறைய கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் முடிகிறது. எனது தொழிலில் சேவைகளில் அடுத்த கட்டத்தினை அடைய உந்துதலாகவும் இருந்து வருகிறார்கள். மென்மேலும் புதிய திறன்களை வளர்த்துக் கொண்டு ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். இத்தகைய புனிதமான சேவைத் தொழிலை நடத்த என்னை தேர்வுசெய்து இக்கட்டான சூழலில் வழிநடத்தும் இறைவனுக்கு நன்றி. நம் கடமைகளை ஆர்வத்துடன் சரிவர செய்தால் வெற்றி கள் நம் வாசல் வந்தடையும் என்கிறார் முனைவர் ஸ்ரீ தேவி லோகநாதன். தன் கல்விசேவைக்காக சிறந்த ஆசிரியர் விருது பலமுறை பெற்றுள்ளார், மற்றும் சிறந்த அகாடமிக்கான விருதுகளையும் பல பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தனுஜா ஜெயராமன்