இன்றைய நவீன உலகில் மனிதர்களின் கட்டுப்பாடற்ற நுகர்வுப் பழக்கத்தால் நிலப்பரப்பு மட்டுமன்றி, விசாலமான பேராழியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரிதும் மாசடைந்து வருகிறது. கடலில் கொட்டப்படும் நெகிழிப் பொருட்கள் மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளால் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்கள் அன்றாடம் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து உயிரிழக்கின்றன. இந்தச் சூழலில், சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி தாரகை ஆராதனா, ஆழ்கடலில் மூழ்கி இதுவரை சுமார் 7,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, உலகளவிலான கவனத்தையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.
சென்னை ஓ.எம்.ஆர் (OMR) காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாரகை ஆராதனா. சிறு வயது முதலே ஆழ்கடல் நீச்சல் மற்றும் கடல் உயிரினங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், பிரபல ஸ்கூபா டைவிங் (Scuba Diving) பயிற்சியாளர் அரவிந்த் என்பவரிடம் முறையான பயிற்சி பெற்றார். முறையான வழிகாட்டுதலோடும், மன உறுதியோடும் கடலுக்கு அடியில் சென்று கழிவுகளை அகற்றும் முயற்சியில் இவர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
சென்னை நீலாங்கரை பகுதியில் ஆழ்கடல் நீச்சல் உபகரணங்களுடன் கடலுக்குள் இறங்கும் ஆராதனா, சுமார் 12 மீட்டர் (40 அடி முதல் 60 அடி வரை) ஆழத்திற்குச் சென்று தீவிரத் துப்புரவுப் பணியை மேற்கொள்கிறார். கடலின் அடியில் தேங்கிக் கிடக்கும் நெகிழிப் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் மீனவர்களால் விட்டுச்செல்லப்பட்ட ஆபத்தான நெகிழி வலைகளைத் தனது விடாமுயற்சியால் சேகரித்துக் கரைக்குக் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு துப்புரவுப் பணியின்போது மட்டுமே ஒரே நாளில் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளார். இதுவரை இவர் சேகரித்துள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளின் எடை 7,000 கிலோவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆராதனா ஆற்றும் இந்தப் பணி வெறும் கழிவுகளை அகற்றுவதோடு நின்றுவிடவில்லை. ‘‘நாம் தூக்கி எறியும் ஒரு சிறிய பிளாஸ்டிக் பொருள், கடலில் வாழும் ஆமைகள், மீன்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு பேராபத்தாக முடிகிறது” என்பதைச் சமூகத்திற்கு உணர்த்தும் உயரிய விழிப்புணர்வுப் பிரச்சாரமாக இது விளங்குகிறது. சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் இவர் காட்டும் அக்கறை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரிதும் நெகிழ வைத்துள்ளது.
12 வயதே நிரம்பிய தாரகை ஆராதனாவின் இந்த அசாத்திய முயற்சி, இன்றைய இளைய தலைமுறைக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். கடலையும் இயற்கையையும் பாதுகாக்க அரசு எடுக்கும் முயற்சிகளோடு, தனிநபர் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆராதனாவின் இச்சாதனை நமக்கு நினைவூட்டுகிறது. ஆராதனா போல் கடலில் இறங்கி உயிரைப் பணயம் வைத்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றத் தேவையில்லை.
ஆனால் நம் அருகே இருக்கும் பூங்காக்கள், கோவில்கள், ஏரி சுற்று வட்டாரங்கள், கடற்கரைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் என இவற்றை அப்புறப் படுத்தலாம். வெறும் நம் வீட்டருகே தெருக்களில் இறங்கி சுத்தம் செய்தாலே கூட ஓரளவு சுற்றுப்புற சூழலைக் காப்பாற்ற முடியும். கடலின் உயிரோட்டத்தைக் காக்கப் போராடும் இந்தச் சாதனைச் சிறுமியின் முயற்சி மேலும் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள்!
- ஆ.கவின்

