புதுடெல்லி: தாய்லாந்தில் இருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் காற்றுச் சுழலில் சிக்கிய நிலையில் 12 பயணிகள் காயமடைந்தனர். தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக சிறிதுநேரம் காற்று சுழற்சி பாதிப்புக்கு உள்ளானது.
இதனால், விமானம் குலுங்கியது. இதையடுத்து பாதுகாப்புக்காக விமானம் பறக்கும் உயரம் திடீரென குறைக்கப்பட்டது. இதில், 10 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 2 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏ320 ரக விமானமானது டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு காற்று சுழற்சி காரணமாக தனது உயரத்தை குறைத்தது தெரியவந்தது. காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.


