Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

என்னை டெஸ்ட் போட்டியில் ஆடவையுங்கள்: சாய் கிஷோர் வேண்டுகோள்

சென்னை: தமிழக சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர். இவர் உள்ளூர் போட்டியில் மிகச் சிறப்பான ரெக்கார்டை வைத்துள்ளார். இதுவரை முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 70 இன்னிங்ஸ்களில் 166 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். கடைசியாக நடந்த ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், 9 போட்டிகளில் 53 விக்கெட்களை வீழ்த்தி ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2வது பந்து வீச்சாளராக இருந்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி: நமது நாட்டில் இருக்கும் சிறந்த ஸ்பின்னர்களில் நானும் ஒருவன் என கருதுகிறேன். என்னை டெஸ்ட் போட்டியில் ஆட வையுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.

நான் எதை குறித்தும் கவலை அடையவில்லை. நான் ஜடேஜாவுடன் அதிகம் விளையாடியது இல்லை. சிஎஸ்கே அணியில் நாங்கள் ஒன்றாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் ஒன்றாக விளையாடியது இல்லை. எனவே, அவருடன் விளையாடுவது எனக்கு நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும். நான் இதை சொல்வதன் மூலம் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக உணர்கிறேன். முன்பு எப்போதை விடவும் நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.சாய் கிஷோர் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆடி இருக்கிறார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற சாய் கிஷோர், 3 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆல் ரவுண்டராக பேட்டிங்கிலும் அவ்வப்போது கைகொடுப்பார்.

அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி தொடராக நடைபெறும் துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணியில் விளையாட உள்ளார். இந்திய தேர்வுக் குழு துலீப் டிராபி தொடரை உன்னிப்பாக கவனிக்க உள்ளது. இந்திய அணி அடுத்த 5 மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், இந்த உள்ளூர் தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குள் போட்டிப்போட்டு வரும் நிலையில், சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.