மாஜி உள்துறை அமைச்சர் மகள் கடத்தல் வழக்கு; 35 ஆண்டாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது: காஷ்மீரில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி
ஸ்ரீநகர்: முன்னாள் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள் கடத்தப்பட்ட வழக்கில் 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீதின் மகளும் மருத்துவ மாணவியுமான ருபையா சயீத், கடந்த 1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். அப்போது சிறையில் இருந்த 5 பயங்கரவாதிகளை விடுவிப்பதாக ஒன்றிய அரசு ஒப்புக்கொண்ட பின்னரே, 5 நாட்களுக்குப் பிறகு ருபையா விடுவிக்கப்பட்டார். காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க முக்கிய காரணமாக அமைந்த இந்தச் சம்பவத்தில் ஜேகேஎல்எஃப் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்டோர் முக்கிய சதிகாரர்களாகச் செயல்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஷபத் அகமது ஷங்லூ என்பவரை 35 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ அதிகாரிகள் நகரில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஜேகேஎல்எஃப் அமைப்பின் நிர்வாகியாகவும், நிதியைக் கையாண்டு வந்தவராகவும் செயல்பட்ட இவர், யாசின் மாலிக் உடன் இணைந்து கடத்தல் சதித்திட்டத்தை தீட்டியதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த இவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷங்லூவை ஜம்முவில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்ட (தடா) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேல் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.