ரூ.60 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் இந்த வருடம் பிப்ரவரியில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். வெறும் ரூ.20 கோடி செலவில் மட்டுமே தயாரான இந்தப் படம் ரூ.242 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் நாயகனான சவுபின் சாஹிர் தான் இதன் முக்கிய தயாரிப்பாளர் ஆவார்.
இந்நிலையில் இந்தப் படத்தயாரிப்பின் மூலம் ஏராளமாக கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டாமல் மோசடி செய்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை கொச்சியிலுள்ள சவுபின் சாஹிரின் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.தொடர்ந்து நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் இந்தப் படத்தில் பல கோடிக்கு கருப்புப் பணம் முதலீடு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 60 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரூ.148 கோடி வருமானம் கிடைத்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது .ஆனால் அதற்கு ஏற்ப வரி கட்டவில்லை. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சவுபின் சாஹிரிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


