தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் சந்திப்பு: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொருளாளர் இப்ராஹிம், துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எம்பி உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசு இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கென கல்வி உதவித்தொகை, தொழில் முனைவோருக்கான உதவித்தொகையை வட்டியில்லாமல் வழங்க வேண்டும்.
நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகளை மதப்பாகுபாடு இல்லாமல் விதிகளுக்குட்பட்டு விடுதலை செய்ய வேண்டும். திமுகவின் வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர்கள் காஞ்சி சித்திக், ஐ.அன்சாரி, பெரோஸ்கான் உடனிருந்தனர்.


