Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாவட்டத்தில் தொடங்கியது எஸ்ஐஆர் பணி; கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வீடுவீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்

* மக்களுக்கு எழுந்த சந்தேகங்கள்

* நிவர்த்தி செய்யுமா தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் நேற்று காலை முதல் தொடங்கிய நிலையில், வீடு வீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் படிவங்களை வழங்கி வருகின்றனர். இந்த பணிகளை தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் வாக்காளர் கணக்கெடுக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தமிழ்நாட்டில் இந்த பணிக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை தமிழ்நாட்டில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மேற்பார்வையில் எஸ்ஐஆர் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது அனைத்து வீடுகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் செல்லவில்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ அந்த வீடுகளுக்கு மட்டுமே சென்றனர். அந்த வீடுகளில் யாராவது இருந்தால் அவர்களின் விவரத்தை கேட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்கினர்.

அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்கினர். அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த முறை தேர்தல் அலுவலர்கள் வரும்போது ஆவணங்களுடன் அவற்றை சமர்பித்தால் போதும் என்று தெரிவித்தனர். இதற்காக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டிற்கு 3 முறை வருவார்கள். இந்த பணியின் போது, அந்த வீடுகளில் இல்லாதவர், இடம் மாறியவர், இறந்தவர், இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரித்தனர். மேலும், புதிய வாக்காளராக பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ நிரப்பி தர வேண்டும் என்றும், அதற்கான விண்ணப்பத்தை வழங்கினர். அப்போது, தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து இடம் பெயர்ந்து வந்த வாக்காளர்கள் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும், என்று மக்களிடம் எடுத்துக் கூறினர்.

பகுதி அளவு நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். அதில் தொடர்புடைய வாக்காளர்களின் பெயர், முகவரி விவரம் இடம் பெற்று உள்ளது. இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் 2002ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால் மற்ற விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த பணியின் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்றனர். மக்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று அதிகாரிகளே இந்த படிவங்களை பெற்றுக் கொள்ள உள்ளனர். டிசம்பர் 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுகள் தோறும் சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

எஸ்.ஐ.ஆர்.பணி முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச.9 முதல் ஜனவரி 1ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரநிதிகள் இந்த பணிகளின் போது தேர்தல் அலுவலர்களுடன் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக நேற்று முதல், டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் வாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் அதற்கான படிவம் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தாம்பரம் சட்டமன்ற தொகுதி, கிழக்கு தாம்பரம், ராஜேஸ்வரி நகர் பகுதிகளில் படிவங்கள் வழங்கும் பணிகளை தாம்பரம் வாக்காளர் பதிவு அலுவலரும், தாம்பரம் மாநகராட்சி ஆணையருமான பாலசந்தர் ஐஏஎஸ் ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு படிவங்கள் முறையாக வழங்கப்படுகிறதா, என்பது குறித்து வாக்காளர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

முகவரி மாறிய வாக்காளர்களுக்கு சிக்கல்

சென்னை போன்ற தொழில் நகரங்களில், பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்று விடுவதால், வீடுகள் பூட்டியிருப்பதாலும், ஏராளமானோர் முகவரி மாற்றப்பட்டிருப்பதாலும் உரியவர்களிடம் படிவங்கள் கொடுப்பதில் சிக்கலை சந்திப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாக்காளரின் முகவரிக்குச் சென்று அவர் அங்கு இல்லாவிட்டால், அவர்களுக்கு எவ்வாறு அந்த படிவத்தை வழங்குவது என்பதிலும், ஒரு முகவரியில் இருப்பவர்கள் வீடு மாறி வந்து அங்கே வசித்து வந்தால், அவர்களது வாக்காளர் அட்டை முகவரி வேறு இடத்தில் இருந்தால் அவர்களுக்கு எவ்வாறு படிவம் வழங்குவது என்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், முகவரி மாறியவர்களுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது என்றால், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் இருக்காது என்பது தான் பொருள்.

ஒருவேளை, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாவிட்டாலோ, சேர்க்கப்பட்டு ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ அதனை எவ்வாறு சரி செய்வது என்பதில் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மீண்டும், அலுவலர்கள் வீட்டுக்கு வரும்போது, பூர்த்தி செய்த ஆவணங்களைக் கொடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருப்பின், மீண்டும் அலுவலர்கள் வீட்டுக்கு வரும்போது, வீட்டில் ஆள் இல்லாமல், ஆவணங்களைக் கொடுக்க முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது. முகவரி மாறிய வாக்காளர்களின் வீடுகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான வழிமுறைகளிலும் தற்போது மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது என்று மக்கள் குழப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.