Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்று கிட்னி மோசடி; பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புலனாய்வுக்குழு விசாரணை

நாமக்கல்: பள்ளிபாளையம் அன்னை சத்யாநகரை சேர்ந்த ஏழை, எளியவர்களிடம் பண ஆசை காட்டி கிட்னி மோசடி குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை, தென்மண்டல ஜஜி பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது. இந்த குழுவினர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் 5 பேரை கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 2016ல் பள்ளிபாளையம் ஆயக்காட்டூரை சேர்ந்த 47 வயது பெண்ணை, சிங்கப்பூர் அழைத்துச்சென்று அவரிடமிருந்து கிட்னியை எடுத்து, சேலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பொருத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த பெண் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார், பள்ளிபாளையம் கீழ்காலனி பகுதியில் உள்ள பயணியர் விடுதியில், அந்த பெண்ணை அழைத்து, சிங்கப்பூருக்கு அவரை அழைத்துச் சென்ற புரோக்கர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்பத்தில் ஒருவருக்கு கிட்னி கொடுத்ததாகவும், அவர்கள் பேசியபடி பணம் தரவில்லை எனவும் கூறியுள்ளனர்.