டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23, 2026 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த 2024ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முதற்கட்டமாக 28 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 30 பேர் மீது குற்றம்சாட்டி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் இருவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை எனத் தெரிவித்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தை அணுகினார். இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என சிபிஐ தரப்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், அடுத்த விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.



