Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வெற்றி என்பது ஒரு விபத்து அல்ல அது உழைப்பின் விளைச்சல்!

நானும் வெற்றியாளராக வேண்டும் என்ற எண்ணமே மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும். ஒவ்வொரு விடியலும் வெற்றியின் விடியலாக அமைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாகவும் இருக்கும். எல்லோருக்கும் இந்த விருப்பம் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே, தங்களுடைய விருப்பத்தை அடையும் விதமாக முயற்சி செய்கிறார்கள். மற்றவர்கள் முயற்சிகளை விட்டு முடங்கி கிடக்கிறார்கள். வேர் இல்லாமல் மரம் இல்லை. அதுபோல முயற்சி இல்லாமல் வளர்ச்சியில்லை. வளர்ச்சியை வசப்படுத்துவதற்கு முதலில் நமது ஆற்றல்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

சூரியன் உச்சியில் இருக்கும்வேளையில், மைதானத்தில் ஒரு தாள் கிடந்தால் அது தானாகவே தீப்பிடித்து எரியாது. ஆனால் ஒரு லென்சைக்கொண்டு சூரிய ஒளியை அந்த காகிதத்தின் மீது குவித்தால், சில மணித்துளிகளில் அந்த காகிதம் தானாகவே தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கும். அதுபோலவேதான் நம்மிடம் இருக்கும் ஆற்றல் முழுவதையும் குறிக்கோளின் மீது குவித்து உழைத்தால் நிச்சயம் வெற்றிகளைக் குவிக்கலாம். வெற்றி என்பது ஒரு விபத்து அல்ல, அது உழைப்பின் விளைச்சல்.

முனை இருக்கின்ற ஊசிதான் தைக்கும். அதுபோல முனைப்பு இருக்கின்ற முயற்சிதான் ஜெயிக்கும்! முடிந்தவரை முயற்சிப்பதல்ல முயற்சி. எடுத்ததை முடிக்கும் வரை முயற்சிப்பதே முயற்சி. அதற்கு தன்னம்பிக்கையே தாரக மந்திரம்.

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்கு போனான். உனக்கு பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசச் செய்கிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், அந்த வேலைகளை விவசாயி ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றான். கடவுள். உடனே அப்படியா? சரி, இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.

மழை பெய் என்றான், பெய்தது. நிறுத்தச் சொன்னபோது நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச்செய்து விதை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேலென்று வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே படு ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான்.திறந்து பார்த்தான். அதிர்ந்தான், உள்ளே தானியத்தைக் காணவில்லை. அடுத்து, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு கதிராக வெட்டி எடுத்துத் திறந்து பார்த்தான். ஒன்றிலுமே தானியம் இல்லை.

ஏ கடவுளே! என்று கோபத்தோடு கூப்பிட்டான். மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்!

ஆனாலும் பயிர் பாழாகிவிட்டதே, ஏன்? கடவுள் புன்னகைத்தார். என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது கதிர்கள் எல்லாம் அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப் போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக் கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரை தேடி வேர்களை நாலா பக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால் தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்குச் சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர,ஆரோக்கியமான தானியங்களை கொடுக்க அவற்றுக்கு தெரியவில்லை. என்றார் கடவுள்.

வேண்டாமடா,உன் மழையும்,காற்றும்! நீயே வைத்துக்கொள் என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி. அதுபோலத்தான் நம்முடைய வாழ்க்கையும் கஷ்டங்களும், போராட்டங்களும்தான் நம்மை செம்மைப்படுத்துகின்றன.நம்முடைய உழைப்புதான் நம்மை வலிமைப்படுத்தும். அப்படி தன்னுடைய வாழ்வில் பல போராட்டங்களை கடந்து உழைப்பால் உயர்ந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.

புதுமைக்கும், புரட்சிகரமான யோசனைகளுக்கும் உலக அளவில் பெயர் பெற்றது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிதா மகனான ஸ்டீவ் ஜாப்ஸ் 1976ல் அந்த நிறுவனத்தைத் தனது பெற்றோர்களின் கார் ஷெட்டில் தான் ஆரம்பித்தார்.நன்றாக நடந்து வந்த நிறுவனம் 1980களில் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது.நிறுவனத்தின் உட்பூசலால், அதை தொடங்கிய ஸ்டீவையே தூக்கி எறிந்தனர் உடன் இருந்தவர்கள்.

அதற்குப் பிறகு ஸ்டீவ் தனியாக நெக்ஸ்ட் என்கிற நிறுவனத்தையும் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் பிக்சர் என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்து, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டினார். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் ஆப்பிள் அடுத்த நிறுவனத்தை 477 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியானார். அதன் பிறகு ஆப்பிளின் தனித்துவமான தயாரிப்புகளான iPod, iTunes ஆகியவற்றைக் கொண்டுவந்தார். 2007ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மொபைல் போன் வெளிவந்தது. இது மொபைல் போன் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இது இன்னும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 50,60 பொருட்களை மானாவாரியாகத் தயார் செய்து விற்பதை விட, நம்மால் சிறப்பாகத் தயார் செய்து விற்க முடியக்கூடிய,5 பொருட்களை தயார் செய்தால் போதும் என்பதுதான் ஸ்டீவ்வின் கருத்து.

புதிய பொருட்களை அல்லது கருவிகளை உருவாக்கி வடிவமைக்கும் திறமை,ஒரு பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அவர் அந்தப் பொருளை அறிமுகப்படுத்தும் விதம் அவருடைய ஒப்பந்த நோக்குடன் கூடிய கலந்துரையாடல். இந்த மூன்றிலும் இவரை மிஞ்ச ஆளில்லை என்று சொல்லலாம்.

இவ்வளவு பேரும்புகழும் பெற்ற ஸ்டீவ் ஒரு இன்ஜினியரோ அல்லது புரோகிராமரோ அல்லது நிர்வாகவியல் படித்தவரோ அல்ல. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர். பொருட்கள் பற்றியும்,தொழில்நுட்பம் பற்றியும் இன்ஜினியராக அல்லாமல் சாதாரண வாடிக்கையாளராக, உபயோகிப்பவராக இருந்து சிந்திப்பவர். தனது நிறுவனப் பொருட்கள் மற்ற நிறுவன பொருட்களை விட தரத்தில் உயர்ந்தே இருக்க வேண்டும் என்று கருதுபவர். இதனால்தான் ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் விலையும் சற்று தூக்கலாகத்தான் இருக்கும்.

தன்னுடைய தயாரிப்புகள் மூலமாக இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டீவ் 2011 அக்டோபர் 5 அன்று புற்றுநோயால் 56 வயதில் இறந்தார். அடுத்த நாளே கலிபோர்னியா கவர்னர் அந்த நாளை ‘‘ஸ்டீவ் ஜாப்ஸ் தினம்” என்று அறிவித்தார்.

‘‘வித்தியாசமாகச் சிந்தியுங்கள்” என்பதே ஸ்டீவின் தாரக மந்திரம். இது ஒரு சிறிய வார்த்தைதான். ஆனால், இந்த வார்த்தையில் எவ்வளவு ஆழமாக ஈடுபட்டிருந்தால் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்திருப்பார். எவ்வளவு தோல்விகளைச் சந்தித்தாலும் அவர் யாருக்காகவும் காத்திருக்காமல் தனியாக நடக்கக் கற்றுக் கொண்டிருப்பவர். நம்மைச் சுற்றி முன்னேறுவதற்கு தேவையான ஏராளமான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும். அதைக் கவனித்துப் பாருங்கள்.எதையும் ஆழமாக அலசிப் பாருங்கள். அத்துடன் வித்தியாசமாகச் சிந்தியுங்கள். தொடர்ந்து முயலுங்கள், நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்பதுதான் ஸ்டீவ் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.