மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷா தான் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு துணிச்சல் இல்லை: ராகுல்காந்தி விமர்சனம்
புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் பொறுப்பு என்றும், மாணவர்களுக்கு என்ன நடந்தது என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் துணிச்சல் அவருக்கு இல்லை என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் போராட்டம் நடத்தியவர்கள் கடந்த மாதம் 20ம் தேதி காவல்துறையின் அத்துமீறல்களுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் டெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் இல்லத்தில்,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் பேசிய ராகுல்காந்தி,”தாங்கள் எவ்வாறு தாக்கப்பட்டோம், அடிக்கப்பட்டோம் மற்றும் மிரட்டப்பட்டோம் என்பதை அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை காத்துள்ளனர். இந்தியாவின் கோட்பாட்டையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துள்ளனர்.
குறைபாடுகள் நிறைந்த, சீர்குலைந்து வரும் மற்றும் பயனற்ற கல்வி முறை குறித்துப் புகார் அளிப்பது குற்றம் இல்லை. உண்மையில் அந்த அமைப்பு மாற்றப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். அதைத்தான் மாணவர்கள் கோரினார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆக்ரோஷமாகவோ, மோசமாகவோ நடந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அடிக்கப்பட்டும், தாக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ளனர். இந்த வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பு. நாடாளுமன்றத்துக்கு வரும் நாகரிகம் அவரிடம் இல்லை.
நடந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான நாகரிகமோ அல்லது துணிச்சலோ அவரிடத்தில் இல்லை. இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒன்று சிறுவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அப்படி என்றால் அவர் திறமையற்றவர் அல்லது இளைஞர்கள் மீது பெல்லட் துப்பாக்கியால் சுடுவதற்கும், வன்முறையை ஏவிவிடவும் அவரே உத்தரவிட்டு இருக்கலாம். அப்படி என்றால் அவர் குற்றவாளி. எதுவாக இருந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு” என்றார்.


