Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

48 லட்சம் மாணவர்கள் பாதிப்பு.. கல்வி நிதி தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு!!

டெல்லி : கல்விக்கான நிதியை விடுவிக்க மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியை வழங்க முடியும் என்று கூறி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில்," சமக்ர சிக் ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியான ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு வழங்காமல், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்று அதனை நிறுத்தி வைத்துள்ளது.

இது பாரபட்சமான ஒன்றாகும். இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வைத்துக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடக் கூடாது. எனவே தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி மொத்தம் ரூ.2291 கோடியை உடனடியாக வழங்கிட ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தலோடு கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி அவசர முறையீடு செய்தார்.கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காதால் 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இதனை கேட்ட பிறகு, கல்வி நிதிக்கான வழக்கை கோடை விடுமுறை கால அமர்வில் பரிசீலிக்க வாய்ப்பில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் விடுமுறை முடிந்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. .