காணாமல் போன பணம் குறித்து விசாரித்ததால் விரக்தி; மருத்துவமனை 4வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை: கோவையில் சோகம்
கோவை: கோவையில் காணாமல் போன பணம் குறித்து விசாரித்ததால் மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அனுப்பிரியா (19). இவர், கோவையில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விடுதியில் தங்கிமுதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மருத்துவமனையில் வேறொரு மாணவியின் ரூ.1500 காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அனுப்பிரியாவையும், சக மாணவர்களையும் அழைத்து விசாரித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்து அனுப்பிரியா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் மற்றும் சக மாணவர்கள் கூறும்போது, ‘‘பீளமேடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை என்ற பெயரில் அனுப்பிரியாவிடமும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரிடமும் பேசி உள்ளனர். இந்த மன அழுத்தம் காரணமாகவே மாணவி அனுப்பிரியா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி அனுப்பிரியாவின் மரணத்திற்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘மாணவியிடம் சாதாரண விசாரணையே நடத்தப்பட்டது. விசாரணைக்கும், மாணவி தற்கொலைக்கும் காரணமில்லை’’ என்றனர்.
