Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் போலீஸ்காரருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை: பிளஸ் 2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில், போலீஸ்காரருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நெல்லை மாவட்டம், களக்காடு, சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (34), போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 2016ல் காவல்துறை பணியில் சேர்ந்த இவர், கடந்த 2024ம் ஆண்டு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு, பிளஸ்2 படித்த 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியை புகைப்படம் எடுத்து அவரை மிரட்டி பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட தொல்லைகளைத் தாங்க முடியாத சிறுமி, பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், ஆனந்த கலைச்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து, அப்போதைய நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து ஆனந்த கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.12 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.