Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டை விட வரையாடுகள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 24ம் தேதி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் உள்பட 29 பிளாக்குகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் வனத்துறை ஊழியர்கள் சுமார் 60 பேர் ஈடுபட்டிருந்தனர். நான்கு நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை பொறுத்தவரை துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்பேரில், ரேஞ்சர் செல்லமணி தலைமையில் அனைத்து ரேஞ்சுகளிலும் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மலை உச்சி பகுதியில் வரையாடுகளுக்கு தேவையான உணவும் நீரும் போதுமான அளவு உள்ளதால், எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகளவு குட்டிகளை காண முடிந்தது. எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்’’ என தெரிவித்தனர்.