Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடர் கனமழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலேரி, சிங்கிலிபாடி, எடையார்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பொன்னி, பாபட்லா ரகம் உள்ளிட்ட நெற்பயிர்கள், இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்தன.

இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையால் மேற்கண்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மேலும், விளை நிலங்களில் தண்ணீர் வடியாததால், நெல்மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனர்.

தற்போது, நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிரிட செலவிட்ட பணம் கூட தங்களுக்கு கிடைக்காது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ள நெற்பயர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.