இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வானகிரி ஊராட்சியை சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் கடலூர் மாவட்டம் வசானா குப்பம் கிராமத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் என்று மொத்தம் 14 பேர் மீன்பிடிக்க சென்ற நிலையில், 9.11.2025 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வருமோ என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் அவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
