Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐந்திணை திட்டத்தின் முன்னெடுப்பால் பழங்குடியின மக்களின் பொருளாதார வாழ்வில் புதிய அத்தியாயம்: நிலையான நேரடி வேலை வாய்ப்புகள்

* தர்சார்பு பொருளாதாரம்

* 13,292 குடும்பங்கள் பயன்

* சமூக பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்துதல்

* பழங்குடியின சிறு - குறு விவசாயத்தில் புரட்சி நவீன இயந்திரமயமாக்கல் மூலம் மகசூல் அதிகரிப்பு

தொல்குடி வேளாண்மை மேலாண்மை - ஐந்திணை திடத்தில் பழங்குடியின வாழ்வில் உழைப்புக்கேற்ற வருவானம் கிடைக்கும் வண்ணம் வேளாண்மையில் இயந்திரமயமாக்ககுதலை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி - பச்சமலை, நாமக்கல் - கொல்லிமலை, கள்ளக்குறிச்சி, சேலம் - கல்வராயன்மலை, திருவண்ணாமலை - ஜவ்வாதுமலை, திருப்பத்தூர் - நெல்லிவாசல்நாடு, வேலூர் - பீஞ்சமந்தை, தருமபுரி - போதகாடு, ஈரோடு - கடம்பூர்மலை, பெரம்பலூர் - மலையாளப்பட்டி, மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறு-குறு பழங்குடியின விவசாயிகளுக்கு அவர்களின் பொறுப்பு மற்றும் ஆக்கப்பூர்வ பங்களினை உறுதி செய்யும் வகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதில் 10 சதவீத தொகையினை விவசாய சங்கங்களின் பங்களிப்பாகவும், 90 சதவீத தொகையினை அரசு மானியமாகவும் வழங்கியுள்ளது.

குறிப்பாக, இந்த 10 மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின விவசாயிகளுக்கும் பூர்வமலை விவசாயிகள் பழங்குடியின சங்கம் சார்பில் இயந்திரங்கள் விநியோகம் செயப்படுகிறது. மேலும், ஒரு சொசைட்டிக்கு ரூ.50 லட்சம் என 20 சொசைட்டிக்கு இதுவரை ரூ.10 கோடி வரை வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 4690 பழங்குடியின விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். இந்த சோசைட்டிக்கள் மூலமாக சுழல் கலப்பை, டிராக்டர், கலவை இயந்திரம், பாக்குமர அறுவடை இயந்திரம், பாக்கு பதனம் செய்யும் கருவி, விதைப்பை இயந்திரம், விசை தெளிப்பான், சிறுதானிய மதிப்பு கூட்டு தொகுப்பு, உமி எடுக்கும் கருவி, சிறு தானிய தரம் பிரிப்பு கருவி, மாவு அரைக்கும் இயந்திரம், பவர் டில்லர், டிராக்டர் டிப்பிங் டிரைலர், தேங்காய் மட்டை உரிப்பான் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை கொண்டு விவசாயம் செய்யும் பழங்குடியின சிறு- குறு விவசாயிகள் இத்திட்டத்தினை வரப்பிரசாதமாக பார்க்கின்றனர். இதனால் குறுகிய பரப்பை அதிக வளர்ச்சியாக்குவது மட்டுமின்றி, செலவை குறைத்து விவசாய பரப்பை அதிகரிக்க வழிவகை செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

* பாக்கு மட்டை மதிப்பு கூட்டல் மையம்- நாமகிரிப்பேட்டை

நாமக்கல் மாவட்டத்தில் ராஜபாளையம், காட்டுப்பட்டி, உரம்பு, செல்லியம்பாளையம் மற்றும் கரளாகாடு ஆகிய கிராமங்களில் உள்ள 240 இருளர் பழங்குடியினக் குடும்பங்களை உறுப்பினர்களாகக் கொண்டு ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பாக்கு மட்டை மதிப்பு கூட்டல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 40 இருளர் பழங்குடியினப் பெண்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நிரந்தரமாக நாள் ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை நிலையான ஊதியம் பெறுகின்றனர். இந்த நிறுவனத்தினை, மேக்னம் அரசு சாரா தொண்டு நிறுவனம் மேற்பார்வை செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் தரமான பாக்கு மட்டைத் தட்டுகள் மற்றும் தேங்காய் நார்ப்பொருட்கள் கோயில்கள், உணவகங்கள் மற்றும் உள்ளூர் கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், நாமக்கல் மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தேங்காய் மதிப்பு கூட்டல் அலகு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அலகிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலகில் தேங்காய் ஓடு நீக்கும் இயந்திரம், சூரிய ஒளியில் உலர்த்தும் சோலார் டிரையர் எண்ணெய் பிழியும் ரோட்டரி பிரஸ் மற்றும் சேமிப்பு தொட்டிகள் போன்ற நவீன உபகரணங்கள் நிறுவப்பட உள்ளன.

வாழ்வாதாரத் திட்டத்தின் பெயர் நிதி ஒதுக்கீடு மொத்த குடும்பங்கள் இடம்

1. சிறுதானிய மதிப்புக்கூட்டல் நிறுவனம் ரூ.1.90 கோடி 195 பழங்குடியின விவசாய குடும்பங்கள் ஜவ்வாது மலை- திருவண்ணாமலை.

2. சீதாப்பழ மதிப்புக்கூட்டல் அலகு ரூ.60 லட்சம் 270 பழங்குடியின மகளிர் குடும்பங்கள் ஜவ்வாது மலை - திருவண்ணாமலை

3. அவகாடோ - தக்காளி மதிப்புக்கூட்டல் அலகு ரூ.95 லட்சம் 348 பழங்குடியின விவசாயிகள் கருமந்துறை - சேலம்

4. புளி மதிப்புக்கூட்டல் அலகு ரூ.25 லட்சம் 270 பழங்குடியின மகளிர் குடும்பங்கள் ஜவ்வாது மலை - திருவண்ணாமலை

5. மீன் மற்றும் நண்டு வளர்ப்பு குட்டைகள் ரூ.2.4 கோடி 300 இருளர் பழங்குடியின குடும்பங்கள் பழவேற்காடு - திருவள்ளூர்,

கிள்ளை - கடலூர்.

6. வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனை மையம் ரூ.2.4 கோடி 75 இருளர் பழங்குடியின மகளிர் குடும்பங்கள் பழவேற்காடு - திருவள்ளூர்,

கிள்ளை - கடலூர்.

7. முந்திரி மதிப்புக்கூட்டல் அலகு ரூ.71 லட்சம் 261 பழங்குடியின குடும்பங்கள் உடையார்பாளையம் - அரியலூர்.

8. சூரிய ஒலி சிறுதானிய மதிப்புக்கூட்டல் அலகுகள் ரூ.1.24 கோடி 182 விவசாய குடும்பங்கள் 7 மாவட்டங்கள்

9. பாக்கு மட்டை மதிப்புக்கூட்டல் அலகு ரூ.12 லட்சம் 240 இருளர் குடும்பங்கள் ராஜபாளையம் - நாமக்கல்

10. தேங்காய் மதிப்புக்கூட்டல் அலகு ரூ.30 லட்சம் 240 இருளர் குடும்பங்கள் ராஜபாளையம் - நாமக்கல்

11. புளி மதிப்புக்கூட்டல் அலகு ரூ.28.6 லட்சம் 25 பழங்குடியின விவசாய குடும்பங்கள் பனகட்டேரி - திருப்பத்தூர்.

12. ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் ரூ.20 லட்சம் 25 குடும்பங்கள் கோதகிரி - நீலகிரி

13. வாழை மதிப்புக்கூட்டல் அலகு ரூ.35 லட்சம் 25 பழங்குடியின விவசாய குடும்பங்கள் பெரியகுறிச்சி - நாமக்கல்

14. மரவள்ளிக்கிழங்கு மதிப்புக்கூட்டல் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டம் ரூ.167.42

லட்சம் 200 பழங்குடியின விவசாய குடும்பங்கள் கல்வராயன் மலை -

கள்ளக்குறிச்சி.

15. கால்நடை வளர்ப்பு ரூ.16.19 கோடி 2200 விவசாயக் குடும்பங்கள் மறுபரிசீலனைக்கு

கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.27.25 கோடி 8.602 பழங்குடியின விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரப் பயன்களைப் பெற்றுள்ளனர்.

* சூரிய ஒளி சிறு தானிய மதிப்பு கூட்டல் அலகுகள் (7 மாவட்டங்கள்)

சிறுதானிய மதிப்புக்கூட்டல் அலகுகள், பழங்குடியினர் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களை பதர்கள் நீக்கியும், மாவாக அரைத்தும் விற்பனை செய்யும் விதமாக வசிப்பிடங்களுக்கு மிக அருகிலேயே 13 அலகுகள் ரூ.1.24 கோடியில் தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. இவை தேவையின் அடிப்படையில் நடமாடும் மையங்களாக சூரிய ஒளியில் இயங்குவது இதன் சிறப்பம்சமாகும். முற்றிலும் 182 பழங்குடியின குடும்பப் பெண்களாலேயே நேரடி வேலை வாய்ப்புடன் இயக்கப்படும் இம்மையங்கள் 65 பழங்குடியின கிராமங்களுக்குச் சேவை அளிக்கிறது.

இச்சிறுதானிய அலகுகளை மேற்பார்வை மற்றும் பயிற்சி அளிக்க தர்மபுரி சிட்டிலிங்கில் உள்ள பழங்குடியின ஆர்கானிக் விவசாயிகள் அமைப்பு நியமிக்கப்பட்டு இரண்டு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வனங்களில் வாழும் பழங்குடியினருக்குச் சிறு வனப் பொருட்களைச் (சேகரித்தல், பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் உரிமைகளைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. ஆனால் வன விளைபொருட்களைப் பதப்படுத்துதல், இடைத்தரகர்களின் தலையீடு, போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாமை போன்ற சவால்களால் உரிய வருவாய் ஈட்ட இயலவில்லை.

* சிறுவனப்பொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் (7 மாவட்டங்கள்)

வனங்களைச் சார்ந்து வாழும் பழங்குடியினரின் வருவாயை உறுதி செய்யும் நோக்கில், நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் 2,403 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட 12 சிறுவனப் பொருட்களுக்கான மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.2.77 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களை திறம்பட நிர்வகிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டியலிடப்பட்ட சிறப்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் முகமைகளாக நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் சிறந்த முறையில் பொருட்களை மதிப்புக்கூட்டுவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும், உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் வளர்ச்சி இணையம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

* ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம்: பழங்குடியின மக்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கு ஒரு முன்னுதாரணம்

நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தின் (Nilgiri Biosphere Reserve) மையப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினக் குடும்பங்களை ஒருங்கிணைத்து ‘ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம்’ செயல்பட்டு வருகிறது. ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மதிப்புகூட்டல் அலகு நிறுவப்பட்டதன் மூலம், 205 பழங்குடியின உறுப்பினர்கள் நேரடியாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வனங்களில் இருந்து சேகரிக்கப்படும் காட்டுத் தேன், மருத்துவ மூலிகைகள் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்தல், சுத்தகரித்தல் மற்றும் தரம் பிரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான தேன், மிளகு, ஏலக்காய், காபி கொட்டை, கிராம்பு, பட்டை போன்றவை தயாரிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

* மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும், ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப் பகுதியிலும் வசிக்கும் 298 பழங்குடியின விவசாயக் குடும்பங்களை கொண்டு மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ரூ.167.42 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ‘‘மரவள்ளிக்கிழங்கு மதிப்புக்கூட்டுதல் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டம்” செயல்படுத்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டத்தின் கீழ், இயந்திரமயமாக்கல் மற்றும் ‘நன்மை’, ‘மேன்மை’ போன்ற உயிரியல் பூச்சிக்கொல்லி தொழில்நுட்பங்கள் மூலம் சாகுபடிச் செலவு குறைக்கப்படும். இப்பகுதிக்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘கல்வராயன் கசாவா’ என்ற பிராண்ட் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

* ஆடு வளர்ப்பில் ஒரு புதிய மைல்கல் ஆடு வளர்ப்பில் ஒரு புதிய மைல்கல்

இருளர் மற்றும் பிற இன பழங்குடியின மக்கள் பிரதானமாக கூலி தொழிலாளர்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இம்மாவட்டங்களில் வாழும் பழங்குடியின குடும்பங்களுக்கு ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள் உடன் 6 மாத காலத்திற்குத் தேவையான அடர் தீவனம் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான தார்ப்பாய்கள் வழங்கபட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு 4 ஆடுகள் அல்லது 50 நாட்டுக் கோழிகள் என வாழ்வாதார உதவி ரூ. 26.81 கோடி மதிப்பீட்டில் 3963 பழங்குடியினக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆடுகள் மற்றும் கோழிகளை பராமரிக்கும் நவீன முறைகள், வளர்ப்பு, வேலி மசால் மற்றும் பல்வேறு மர இலைகளின் ஊட்டச்சத்து மதிப்பைப் பற்றிய புரிதல், வழங்கப்பட்ட வேலி மசால் விதைகளைக் கொண்டு தீவனம் உற்பத்தி செய்யும் முறை பற்றி சென்னையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கடந்த 20 மாதங்களில், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 4 ஆடுகள் பெருகி 15 முதல் 18 ஆடுகளாக வளர்ந்துள்ளன. இது ஒரு நிலையான வருமானத்தை கொடுத்துள்ளது.

* வாழை விளை பொருட்களுக்கான மதிப்புக்கூட்டல் நிறுவனம் - நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பெரியகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 25 பழங்குடியின விவசாயக் குடும்பங்களை உறுப்பினர்களாக கொண்டு, உள்ள ICAR - தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) உடன் இணைந்து வாழையின் அனைத்துப் பாகங்களையும் பொருளாதார ரீதியாக மதிப்புக்கூட்ட, ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் சிறு நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை இயக்கவும், பராமரிக்கவும், தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ICAR - NRCB) மூலம் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்குத் தயாரிக்கப்படும் தரமான வாழை நார் கைவினைப் பொருட்கள், பனானா பிக், வாழைப்பூ தொக்கு, வாழைத்தண்டு ஊறுகாய் மற்றும் சிப்ஸ் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், சந்தைகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் வாழைச் சாகுபடியின் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனங்கள்

* ஐதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம்.

* பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்.

* திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

* திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்.

* கொச்சியில் உள்ள தேசிய மீன் மரபணு வள பேணகம்.

* கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம்.

* சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்,

* மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்.

* புத்தூரில் உள்ள இந்திய முந்திரி ஆராய்ச்சி இயக்ககம்.

* பழங்குடியின பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதே இலக்கு

இத்திட்டங்களின் சிறப்பம்சமாக பழங்குடியின பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்றுதல், லாப நோக்கிலான நிலையான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல், இடைத்தரகர்களின் தலையீடுகளை தவிர்த்தல், விளைபொருட்களுக்கான உரிய விலையினை விவசாயிகளே நிர்ணயம் செய்தல் மற்றும் சிறு வன பொருட்கள் சேகரிப்பை முறைப்படுத்தி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் போன்றவற்றை முக்கிய அம்சங்களாக கொண்டு 15 மாவட்டங்களில் சிறப்பான பொருளாதார முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

* மாவட்ட அளவிலான திட்ட கண்காணிப்பு அலகுகள்

நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ஈரோடு, சேலம், விழுப்புரம், திருச்சி மற்றும் கடலூர்.

இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவதற்காகவும், தொடர் கண்காணிப்பிற்காகவும் 13 வல்லுனர்களை கொண்டு மாநில அளவிலும், முற்றிலும் 311 பழங்குடியின இளைஞர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான திட்ட கண்காணிப்பு அலகுகள் (PMU) ஏற்படுத்தப்பட்டு, சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

* பச்சமலை பழங்குடியின விவசாயிகளிடம் இருந்து விதைகள் கொள்முதல், புதிய முன்னெடுப்பு

திருச்சியில் உள்ள பச்சமலைப் பகுதி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐஐஎச்ஆர் பெங்களூருடன் இணைந்து ‘விதை கிராமத் திட்டத்தை’ (Seed Village Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகள் பிரத்யேகமாக காய்கறிகளை விதை உற்பத்திக்காகப் பயிரிகிறார்கள். இந்த விதைகள் நேரடியாக ஐஐஎச்ஆர் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காத காலங்களில், அவற்றை வீணாக்காமல் விதைகளாக மாற்றி வருமானம் ஈட்ட முடியும். இதுவரை 125 விவசாயிகள், ஐஐஎச்ஆர் வழங்கிய உயர்தர ‘ஆர்கா’ (Arka) ரக நாற்றுகளைப் பயன்படுத்தி தக்காளி, மிளகாய், மாம்பழம், கொய்யா மற்றும் பப்பாளி போன்றவற்றை வெற்றிகரமாகப் பயிரிட்டுள்ளனர். வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 400 குடும்பங்களுக்கு பீன்ஸ் விதை தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.