தென்மாவட்டங்களில் இருந்து ஐதராபாத்திற்கு நேரடி ரயில் வசதி கிடைக்குமா?: தொடர்ந்து நீர்த்து போகும் பயணிகளின் கனவு
நெல்லை: தென்மாவட்டங்களில் இருந்து ஐதராபாத்திற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்கிற பயணிகளின் பலஆண்டு கோரிக்கை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. மும்பைக்கும், டில்லிக்கும் கூட ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே ஐதராபாத்தை மட்டும் கண்டு கொள்ளாமல் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை, பெங்களூரு, புனே போன்ற இடங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஹவுரா, கத்ரா, வாரணாசி போன்ற இடங்களுக்கு வாராந்திர ரயில் சேவையும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டின் வடக்கே அருகில் உள்ள ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்துக்கு நேரடி ரயில் சேவையும் வெகு காலமாக இல்லை. ஐதராபாத்துக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று சுமார் 20 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளனர். கன்னியாகுமரியிலிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்படும் மூன்று ரயில்களில் ஒரு ரயிலை திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை நெடுங்காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்பட்டால் சென்னைக்கு ஒரு கூடுதல் ரயில் சேவையும் கிடைக்கும். இவ்வாறு வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென்மத்திய மண்டலம் சார்பில், தாம்பரத்திலிருந்து ஐதாராபாத் செல்லும் சார்மினார் ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய 2021ம் ஆண்டு திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்ட கருத்துருவுக்கு கடந்த 3 வருடங்களாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
இந்த ரயில் நீட்டிப்புக்கு எந்த ஒரு பராமரிப்பும் கன்னியாகுமரியில் தேவையில்லை. ஐதராபாத்தில் மட்டுமே பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என்கிற நிலை இருந்தும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதே ேகாரிக்கையை கோட்ட வாரியாக நடந்த கூட்டத்தில் எம்.பி.க்களும் முன்வைத்த நிலையில், தெற்கு ரயில்வே தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு கோரிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துவிட்டு கிடப்பில் போட்டுவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சார்மினார் ரயில் நீட்டிப்பு இன்றுவரும், நாளை வரும் என்று இலவு காத்த கிளி போல் தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தென் மத்திய ரயில்வே மண்டலம் சார்மினார் ரயிலின் பராமரிப்பு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு சார்மினார் வேறு எந்த ஒரு ரயிலின் பெட்டிகள் இணைப்பு இல்லாமல் இரண்டு செட் பெட்டிகள் தனி பெட்டிகளான இருந்து ஐதராபாத்தில் முதன்மை பராமரிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இந்த சார்மினார் ரயிலில் பெட்டிகளின் ஐதராபாத் -ஹுப்ளி ரயிலின் பெட்டிகளுடன் இணைத்து நான்கு செட் பெட்டிகள் பராமரிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இவ்வாறு செய்யப்பட்டுள்ளதால் இனி சார்மினார் ரயிலை நீட்டிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழிபாதை பணிகள் முடிந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து ஐதராபாத்திற்கு தினசரி ரயில் இயக்கம் என்பது தொடர்ந்து கனவாகவே உள்ளது. தற்போது தென்மாவட்டங்களில் இருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமானால் காலையில் சென்னை சென்று, அங்கிருந்து மாலையில் ஐதராபாத்துக்கு செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தென்மாவட்டங்களில் இருந்து ஐதராபாத்திற்கு தினசரி ரயில் இயக்கிட வருங்காலங்களிலாவது தெற்கு மற்றும் தென்மத்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.


