Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சூனாம்பேடு அருகே காணாமல்போன கல்லூரி மாணவி காதலனுடன் மீட்பு

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் மகள் சசிகலா (18). மரக்காணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி என்பதால் பதறிபோன அவரது பெற்றோர் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தநிலையில், பெண்ணின் உறவினர்கள் கடந்த 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாயமான மாணவி தனது காதலனான சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் டேனியல் (24) என்பவருடன் பாபநாசம் காவல் நிலையத்தில் திருமண கோலத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே, இந்த வழக்கு மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, பாபநாசம் சென்ற போலீசார் இருவரையும் மீட்டு மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொண்ட இவர்கள் இரு வீட்டாருக்கும் பயந்து பாபநாசம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.