பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் ஒன்றியம், எலந்தகுட்டை கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
உலக மண் வள தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமில், பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி பங்கேற்று விளக்கமளித்தார்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் மாதிரி சேகரித்து, மண்ணின் வளத்தை அறிந்து உரமிடுதல் அவசியம். மண் மாதிரி எடுக்காத விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு, ஏற்கனவே வேளாண்மைத்துறை மூலம் மண்ணின் தன்மை குறித்து, தமிழ் மண் வளம் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் தங்கள் நிலத்தின் கார, அமில, உப்புத்தன்மைகளை தெரிந்து கொள்ளலாமென அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் உழவன் செயலியின் மூலம், தங்கள் மாவட்டம், வட்டாரம், வருவாய் கிராம், புல எண், கைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால் பயிர்களுக்கான உரம் குறித்த பரிந்துரைகளையும், பயிர்பாதுகாப்பு முறை, ஜிப்சம் உபயோகிக்கும் முறை, சுண்ணாம்பு நில மேலாண்மை யுக்திகள், மண் மற்றும் நீர் மாதிரி சேகரித்தல் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாமென தெரிவித்தார். முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஷ்வபிரியா, சரவணன், சின்னதுரை, கிருபா, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
