Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடை வெயிலால் வரும் சரும நோய்களும் அதற்கான தீர்வுகளும்

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கடும் வெயில், வியர்வை, தூசி, மாசு, நீரிழப்பு போன்ற காரணங்களால் பல்வேறு சரும நோய்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படலாம். சிலருக்கு இது சாதாரண அரிப்பு அல்லது கருமை அளவிலேயே இருக்கும்; சிலருக்கு தீவிரமான அலர்ஜி, பூஞ்சை தொற்று, சூரிய ஒளி பாதிப்பு போன்ற பிரச்னைகளாக மாறும்.சருமம் என்பது உடலின் மிகப்பெரிய பாதுகாப்பு உறை. வெயில் நேரடியாக தாக்கும்போது உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த அதிக வியர்வை வெளியிடுகிறது. ஆனால் அதிக வியர்வை, ஈரப்பதம் மற்றும் சுத்தமின்மை சேர்ந்துவிட்டால், சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வேகமாக வளரத் தொடங்குகின்றன. இதுவே பல கோடை கால சரும நோய்களுக்கு காரணமாகிறது.

கருமை (Sun Tan)

கோடை காலத்தில் அதிகமாக காணப்படும் பிரச்னை வெயிலால் உண்டாகும் கருமை. சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வைலட் கதிர்கள் (UV Rays) சருமத்தில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் முகம், கை, கழுத்து போன்ற வெளிப்புற பகுதிகள் கருமையாக மாறுகின்றன.இது பெரும்பாலும் ஆபத்தான நோய் அல்ல. ஆனால் நீண்டகாலமாக வெயிலில் இருப்பது சரும வயதான தோற்றம், சுருக்கங்கள் அதிகரிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.இதிலிருந்து பாதுகாப்பதற்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடி வெயிலில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன் (Sunscreen) பயன்படுத்துவது முக்கியம். பருத்தி ஆடைகள், தொப்பி, கண்ணாடி போன்றவை பாதுகாப்பளிக்கும்.

வேர்க்குரு (Heat Rash / Prickly Heat)

கோடை காலத்தில் குழந்தைகள் மற்றும் அதிகமாக வியர்க்கும் நபர்களுக்கு வெப்பக் கட்டி அதிகமாக வருகிறது. வியர்வை சுரப்பிகள் அடைபடும்போது சிறிய சிவப்புப் புள்ளிகள், அரிப்பு, எரிச்சல் போன்றவை தோன்றும்.

கழுத்து, முதுகு, மார்பு, கைமடங்கு போன்ற இடங்களில் இது அதிகமாக காணப்படும். குளிர்ச்சியான சூழல், தளர்வான பருத்தி ஆடைகள் மற்றும் அடிக்கடி குளிப்பது இதை குறைக்க உதவும். சந்தையில் கிடைக்கும் சில பவுடர்கள் தற்காலிக நிவாரணம் தரலாம். ஆனால் அதிக ரசாயன பொருட்கள் உள்ள தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவது சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம்.

பூஞ்சைத் தொற்று (Fungal Infection)

வியர்வை மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் கோடை காலத்தில் பூஞ்சைத் தொற்றுகள் வேகமாக பரவுகின்றன. தொடை இடுக்குகள், கைமடிப்பு, பாதங்கள் போன்ற ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வட்ட வடிவில் சிவப்பு தழும்புகள், அரிப்பு, தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.இதை சாதாரண அரிப்பாக நினைத்து கவனிக்காமல் விட்டால் தொற்று பரவக்கூடும். உடலை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது முக்கியம். வியர்வை நனைந்த ஆடைகளை உடனே மாற்ற வேண்டும். தனிப்பட்ட துணி மற்றும் உடைகளை மற்றவர்களுடன் பகிரக்கூடாது.தொடர்ச்சியான அரிப்பு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள் பயன்படுத்த வேண்டும்.

சரும எரிச்சல் (Sunburn)

அதிக நேரம் க டலில் வெயிலில் இருப்பதால் சிவந்து எரிச்சல், வலி, சில நேரங்களில் நீர்க்கட்டி போன்ற பிரச்னைகள் உருவாகலாம். இதையே சன் பர்ன் என்று அழைக்கிறார்கள்.வெளிர்நிற சருமம் கொண்டவர்களுக்கு இது அதிகமாக வரும். குறிப்பாக கடற்கரை, நீச்சல் குளம், வெளிப்புற வேலைகள் போன்ற சூழல்களில் இது அதிகம் காணப்படுகிறது. சன் பர்ன் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல், அலோவேரா ஜெல் பயன்படுத்துதல், போதுமான தண்ணீர் குடித்தல் போன்றவை உதவும். மிகவும் தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

முகப்பரு மற்றும் எண்ணெய் சுரப்பு

கோடையில் வெப்பம் அதிகரிப்பதால் சரும எண்ணெய் சுரப்பிகளும் அதிகமாக செயல்படுகின்றன. இதனால் முகப்பரு, கரும்புள்ளி, துளை அடைப்பு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். அதிக எண்ணெய் உள்ள கிரீம்கள் மற்றும் கனமான மேக்கப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

அலர்ஜி மற்றும் அரிப்பு

சிலருக்கு வெப்பத்தால் நேரடியாக அலர்ஜி ஏற்படலாம். சிறிய சிவப்பு தடிப்புகள், அரிப்பு, எரிச்சல் போன்றவை தோன்றும். தூசி, வியர்வை, ரசாயன சோப்புகள், சன்ஸ்கிரீன் போன்றவற்றாலும் சிலருக்கு எதிர்வினை ஏற்படலாம்.

கோடையில் சருமத்தை பாதுகாக்க உதவும் பழக்கங்கள்

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல; உடல்நலத்திற்கும் முக்கியமானது.

தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிக எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகளை குறைக்க வேண்டும்.

தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிக்கலாம்.

வியர்வை நனைந்த ஆடைகளை நீண்ட நேரம் அணியக்கூடாது.

மென்மையான சோப்புகள் பயன்படுத்த வேண்டும்.

கடுமையான வெயிலில் குடை அல்லது தொப்பி பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் சருமத்தில் அதிக ரசாயன பொருட்களை தவிர்க்க வேண்டும்.

சருமத்தில் தொடர்ந்து அரிப்பு, வலி, கரும்புள்ளி, நீர்க்கட்டி அல்லது தொற்று இருந்தால் சுய சிகிச்சை செய்வதற்குப் பதிலாக தோல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

- எஸ்.ஆர்த்தி