சென்னை: பணியில்லா கால மீன்பிடி உதவித்தொகை ரூ.6,000-த்திலிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி உயர்வால் 1.93 லட்சம் மீனவர் குடும்பங்கள் பயன்பெறும். மேலும் 10,000 பெண்களுக்கு ஆண்டுதோறும் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். கால்நடை, மீன்வளம், பால்வளத்துறைக்கு ரூ.4,880 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவகம் என்ற பெயரில் இந்தியாவின் முதல் AI நகரம் உருவாக்கப்படும். ரூ.3,200 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மகளிர் தொழில் முனைவோர்களை உருவாக்க ரூ.222 கோடி மானியத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அரசு சேவைகளை எளிமைப்படுத்த இ-சேவை 2.O திட்டம் அறிமுகம் செய்யப்படும். கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கப்படும். கூட்டுறவு துறைக்கு ரூ.8,028 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. AI மற்றும் டிஜிட்டல் சேவை திட்டங்களுக்கு ரூ.398 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
