Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய மாணவர் கைதி போல நடத்தப்பட்டது ஏன்? விளக்கம் கேட்ட வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் அழுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. நாடு கடத்தும் விவகாரத்தில் இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் இதுபோல குற்றவாளிகளை போல மோசமாக நடத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. எனவே இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், வாஷிங்டன், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அமெரிக்க அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மோசமாக நடத்தப்பட்ட நபர் அரியானாவை சேர்ந்தவர். அவர், விசா இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர் என்பதால் அவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெவார்க் விமான நிலையத்திற்கு அழைத்து வந்த போது, அந்த நபரின் நடத்தை பயணத்திற்கு உகந்ததாக இல்லை என்பதால், அவர் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் பயணம் செய்ய தகுதியானவுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* அமெரிக்கா ஆதரவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்று திரும்பி வந்துள்ளது. இந்த பயணத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை அமெரிக்கா முழுமையாக ஆதரிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் நேற்று தெரிவித்துள்ளார்.