Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவி மீது தீராத காதல்... 93 வயது முதியவருக்கு இன்ப அதிர்ச்சி; தங்க தாலி வழங்கி ஆச்சரியமூட்டிய நகைக்கடை உரிமையாளர்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாகிர் கிராமத்தை சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே (93). ஒரு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.. இவரது மனைவி சாந்தாபாய். ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் வயதான தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். முதுமையை அடைந்தாலும் நிவ்ருத்தி ஷிண்டேவுக்கு, தனது மனைவி மீது அதிக அளவில் பாசத்துடன் இருந்துள்ளார். சமீபத்தில் தனது மனைவிக்கு ஒரு அன்பு பரிசு வழங்க விரும்பினார். இதையடுத்து மனைவியை அழைத்து கொண்டு சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். பாரம்பரிய வெள்ளை வேட்டி, குர்தா மற்றும் தொப்பி அணிந்து வந்த முதியவரை பார்த்ததும், யாசகம் கேட்டுதான் வந்துள்ளார் என நகைக்கடை ஊழியர்கள் நினைத்தனர்.

நகையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமாக இருப்பது தெரியாமல் தன்னிடம் இருந்த ரூ.1,120-யை எடுத்து கொடுத்து, அந்த பணத்தில் மனைவிக்கு, தாலி சங்கிலி தருமாறு முதியவர் கோரினார். அதனை தனது மனைவிக்கு ஆசையாக கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு நகைக்கடையில் இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டனர். குறிப்பாக நகைக்கடை உரிமையாளர், இந்த வயதிலும் இப்படி ஒரு காதல் ஜோடியா என நெகிழ்ச்சியடைந்து மனம் உருகினார். எளிமையான அந்த முதியவரின் காதலுக்கு விலை உயர்ந்த தங்கத்தை பரிசாக வழங்க முன்வந்தார். அதனால் நகைக்கடை உரிமையாளர் வயதான தம்பதியிடம் வெறும் ரூ.20 மட்டும் வாங்கி கொண்டு, தங்க தாலி சங்கிலியை பரிசாக வழங்கினார். இதனால் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் காண்போர் நெஞ்சத்தையும் நெகிழ வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடக தளத்தில் மின்னல் வேகத்தில் வைரலானது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.