திருச்சி அருகே அரசு பேருந்தும், காரும் மோதி விபத்து: முசிறி கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருச்சி: திருச்சி அருகே அரசு பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரையை பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனாவிற்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர், புதுக்கோட்டையில் அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் பணிக்காலம் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே சார்ந்து இருந்தது. தற்போது இவர் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் பணி நிமித்தமாக முசிறியிலிருந்து இன்று காலை அரசு ஜீப்பில் திருச்சி-கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் எதிரே கரூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு ஜீப்பில் டயர் வெடித்துள்ளது. இதனால் எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் இடதுபக்கமாக திரும்பியபோது சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இடது புறமாக இருந்த வருவாய் வட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்தார். கரை ஓட்டிவந்த ஓட்டுனர் காயங்களுடன் உயிர்தப்பினார். மேலும் இவ்விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

