திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 74,374 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,477 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.02 கோடி காணிக்கை கிடைத்தது.
இந்நிலையில் வாரவிடுமுறை நாளான இன்று வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் திருப்பதி அலிபிரி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வெளிப்பகுதியில் சிலாதோரணம் வரை பக்தர்கள் காத்துள்ளனர். இவர்கள் சுமார் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வர். இதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.

