Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியானது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு இன்று (29.10.2024) முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியினை திறந்து வைத்தார்கள்.

இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bed Rooms), 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விடுதியில் ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages) திருக்கோயில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடிலுக்கு நாளொன்றுக்கு வாடகையாக ரூ.2,000 நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 23.10.2024 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bed Rooms), 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகளுக்கான முன்பதிவு இன்று (29.10.2024) முதல் தொடங்குகிறது.