திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும்படி போலீசார் அறிவுறுத்தினர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக வங்கக்கடலோரம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால் தென் தமிழக கடற்கரையோர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் நேற்று திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டது. சுமார் 25 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பீதியடைந்தனர். கடலில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிகளவில் கற்கள் உள்ளதால் நீராட இயலாத சூழல் நிலவுகிறது. கடல் அரிப்பை தொடர்ந்து பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் அறிவுறுத்தினர்.


