Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி ரயில்நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

திருத்தணி: ஆந்திராவுக்கு ரயிலில் கடத்தி செல்வதற்கு, திருத்தணி ரயில்நிலைய மேடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை இன்று காலை பறக்கும் படை தனி துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டத்தின் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்பட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அவற்றை சிறுசிறு மூட்டைகளாக கட்டி, ரயில் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலமாக ஒருசில மர்ம கும்பல் கடத்தி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுதொடர்பாக வந்த புகார்களின்பேரில், திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் இன்று காலை பறக்கும் படை தனி துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திராவுக்கு கடத்தி செல்வதற்காக, அங்குள்ள ரயில்நிலைய நடைமேடையில் ரேஷன் அரிசி மூட்டைகள் தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது வருவாய்துறையின் தனிப்படை பிரிவுக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கு ரயிலில் கடத்தி செல்ல, திருத்தணி ரயில்நிலைய நடைமேடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை தனிப்படை தனி துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். ரயில்நிலைய நடைமேடையில் வருவாய்துறை அதிகாரிகளை கண்டதும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருத்தணி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.