Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தேனி அருகே வீரபாண்டியில் மஞ்சள் நீராட்டுடன் கோயில் வீட்டுக்கு சென்ற கவுமாரியம்மன்: 8 நாள் நடந்த சித்திரை திருவிழா நிறைவு

தேனி: தேனி அருகே, வீரபாண்டியில் 8 நாள் கோலாகலமாக நடந்த சித்திரைத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மஞ்சள் நீராடி கவுமாரியம்மன் கோயில் வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி அருகே பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருவிழாவுக்காக கடந்த 16ம் தேதி கம்பம் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 6ம் தேதி முதல் நேற்று வரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அம்மனிடம் வேண்டுதல் செய்த பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

திருவிழா நாட்களில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ரதவீதிகளில் வலம்வந்து நேற்று முன்தினம் நிலைக்கு வந்தது. இதையடுத்து ஊர்ப் பொங்கல் விழா நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கம்பம் நடப்பட்டிருந்த இடத்தில் பக்தர்கள் நீர் தெளித்தனர். இத்துடன் திருவிழா நிறைவடைந்தது. சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, இன்று காலை அம்மன் கோயில் வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மஞ்சள்நீர் தெளித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக வீரபாண்டி கிராமத்திற்குள் உள்ள கோயில் வீட்டிற்கு அம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வீரபாண்டி கிராமத்தில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.