Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதிந்த அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். போராட்டத்தின்போது பணிமாற்றப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2016, 2017, 2019ம் ஆண்டுகளில், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது... பல பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். பல்வேறு குற்றவியல் வழக்குகளும் இவர்கள் மீது பதியப்பட்டன.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆட்சியில் பல்வேறு கட்டங்களில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, திமுக ஆட்சி அமைந்ததுமே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இப்போது வரை சில ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனால், பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெறுவதில், அவர்களுக்கு சிக்கல்களும் ஏற்பட்டன. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட (10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.8.2017 அடையாள வேலை நிறுத்தம்), 7.9.2017 முதல் 15.09.2017 வரை; 22.1.2019 முதல் 30.01.2019 வரை பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக்காலமும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.

வேலைநிறுத்தம் காரணமாக, ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.