ஆசிரியர்கள், பணியாளர்களை அழைத்து பேசி பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2021ம் ஆண்டில் தேர்தல் களத்தில் “பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க 3 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அறிக்கை அளிக்க ஒன்பது மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரசின் இந்த முடிவு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து, ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்று, செயல்படுத்தும் கொள்கை முடிவை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
