Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்துக்கு அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசால், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்கள் கொண்டுள்ளது. இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுவர்.

அதன்படி, தற்பொழுது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், கை/கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற/மதி இறுக்கமுடையோர், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், கற்றல் குறைபாடுடையோர், மனநல பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரின் பரிந்துரையுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் வழியாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 30.5.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க ஏதுவாக, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 23.5.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.