சென்னை: சென்னை தங்கசாலையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் (எ) ராமர் கோயிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்த ரூ.26.43 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவு பெற்று இன்று வேத மந்திரங்கள் முழங்க, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறுகையில்,’முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,634 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்று மட்டும் தஞ்சாவூர் மாவட்டம், புதுசத்திரம், காளியம்மன் கோயில், கோவை மாவட்டம், சரவணம்பட்டி, ரத்தினகிரி மருதாசலக்கடவுள் கோயில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், பரமசிவன் கோயில் என 14 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவக்குமார், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ராமுலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முரளி, அப்பாரஞ்சி, இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
