Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும்வகையில் முருகன் கோயில்களில் ரூ.1085.63 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பொன்னேரி துரை.சந்திரசேகரன்(காங்கிரஸ்) பேசுகையில், “தமிழ் கடவுள் என்று சொல்லப்படுகின்ற சாதி மறுப்பு திருமணத்தை அன்று அறிவித்து நமக்கு எல்லாம் விட்டுச்சென்ற முருகனின் அறுபடை வீடு திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை போல அறுபடை வீடு இல்லாத பிற முருகன் திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறதா, அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் இதுவரை எவ்வளவு பக்தர்கள் பயன் பெற்றனர் என்பதை விவரத்தை அமைச்சர் தெரிவிப்பாரா? என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குள்ள 2000 மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் அரசு மானியத்தில் இதுவரை அறுபடைவீடு ஆன்மிகப் பயணத்தை முடித்துள்ளார்கள். இந்த ஆண்டு மானிய கோரிக்கையில், மேலும் 2000 பக்தர்களை ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் அனுமதி அளித்துள்ளதோடு அதற்கும் சேர்த்து அரசு நிதியை மானியமாக முதல்வர் ஒதுக்கி இருக்கின்றார். இந்த திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு 110 முருகன் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது.

அறுபடைவீடு அல்லாத 143 முருகன் கோயில்களில் ரூ. 284 கோடி மதிப்பீட்டில், 609 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1085.63 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் அறுபடை வீடுகள் என்று சொல்லப்படுகின்ற திருச்செந்தூரில் 350 கோடி ரூபாய் செலவிலும், பழனியில் 180 கோடி ரூபாய் செலவிலும், திருப்பரங்குன்றத்தில் ரூ.2.60 கோடி செலவிலும், சுவாமிமலையில் ரூ.4 கோடி செலவில் மின்தூக்கி அமைக்கும் பணியும் நம்முடைய பழமுதிர்சோலையில் ரூ.9.10 கோடி செலவில் மலைப்பாதை சீரமைப்பு போன்ற பணிகளும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் நடைபெற்று வருகின்றன.

தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதோடு நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் சுமார் 5 லட்சம் முருக பக்தர்கள் பங்கேற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இந்த திராவிட மாடல் ஆட்சிதான் நடத்தியது என்பதை பதிவு செய்து, முருகன் திருக்கோயில்களுக்கு செய்கின்ற திருப்பணிகள் தொடரும் தொடரும் தொடரும்” என்றார்.