Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: 26ம் தேதி தேரோட்டம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. இதில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை ேதர் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று(18ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர், தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து, மீன லக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது.

சித்திரை தேர் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் காலை நம்பெருமாள் பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் வீதியுலா நடைபெறும்.

வரும் 21ம் தேதி கருடசேவையும், 24ம் தேதி நம்பெருமாள் நெல் அளவு கண்டருளும் வைபவமும் நடக்கிறது. 25ம் தேதி நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுகிறார். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26ம் தேதி காலை 6 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. 11ம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.